search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைனான்ஸ் அதிபர் கொலை"

    வில்லியனூரில் பைனான்ஸ் அதிபரை கொன்றது ஏன் என்பது குறித்து கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் கணுவா பேட்டைய சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). பைனான்ஸ் அதிபர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் கோட்டைமேடு சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை அவரது நண்பர்கள் ராஜா, சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கொலையாளி ராஜா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    ராமலிங்கம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நானும் அவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்தேன். இந்த நிலையில் எனக்கு வேண்டிய சிலருக்காக ராமலிங்கத்திடம் இருந்து ரூ.10 லட்சம் வாங்கி கடனாக கொடுத்திருந்தேன்.

    ஆனால் அதை வாங்கியவர்கள் அசலையும், வட்டியையும் தரவில்லை. எனவே ராமலிங்கம் என்னிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    இதற்காக எனது நண்பர்கள் சக்திவேல், சபரி, நடராஜன் ஆகியோர் உதவுவதாக தெரிவித்தனர். எனவே ராமலிங்கத்தை கொல்வதற்கு திட்டத்தை உருவாக்கினோம்.

    நேற்று முன்தினம் மதியம் அவரை வில்லியனூரில் உள்ள மதுபாருக்கு அழைத்து சென்று நன்றாக குடிக்க வைத்தோம். அதன்பிறகு தியேட்டருக்கு சென்று சினிமா பார்த்தோம். இரவு மீண்டும் அவரை குடிக்க அழைத்து அங்கு வைத்து கொல்வது என்று திட்டமிட்டோம்.

    நாங்கள் இரவு நேரத்தில் கோட்டைமேடு சுடுகாட்டு பகுதியில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். ராமலிங்கத்தை கொல்ல வேண்டும் என்பதற்காக இரும்பு குழாய் ஒன்றை எடுத்து சென்று அங்கு தயாராக வைத்திருந்தோம்.

    இரவு 9 மணி அளவில் ராமலிங்கத்தை அழைத்துக் கொண்டு நான் அங்கு சென்றேன். மற்ற 3 பேரும் பின்னர் வந்தனர். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்தோம். அப்போது சக்திவேல், ராஜாவிடம் ஏன் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறாய் என்று கூறி ராமலிங்கத்தை அடித்தார்.

    அப்போது மறைத்து வைத்திருந்த இரும்பு குழாயை எடுத்து ராமலிங்கத்தின் தலையில் பலமுறை ஓங்கி அடித்தோம். இதில் மண்டை உடைந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். நல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த எங்களை போலீசார் கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு ராஜா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    கைதானவர்களிடம் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    பொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்ஸ் அதிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள கோத்தாம்பட்டியை சேர்ந்தவர் மணி என்கிற குண்டுமணி (39). பைனான்ஸ் அதிபர். இவருக்கும் குள்ளக்கா பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியும் டிரைவருமான குணசேகரன் மனைவி மணி மேகலைக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மணியின் மனைவி பேபிக்கு தெரிய வந்தது.

    அவர் கணவரை கண்டித்தார். கள்ளத்தொடர்பை கைவிடும் படி கேட்டுக் கொண்டார். இதில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    மணிமேகலை கணவர் குணசேகரனும் மனைவியை கண்டித்தார்.

    இதனை தொடர்ந்து மணிமேகலையை அவரது கணவரிடம் இருந்து பிரித்து புளியம்பட்டியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து மணி தங்க வைத்தார். அங்கு அடிக்கடி சென்று வந்தார்.

    தனது மனைவியை பிரித்ததால் குணசேகரன் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று இரவு மணிமேகலையுடன் மணி புளியம்பட்டியில் இருந்தார். அங்கு வந்த குணசேரகன் தான் கொண்டு வந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தினார்.

    இதில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மணி இறந்தார். அவரை குத்தி கொன்ற குணசேகரன் தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான குணசேகரனை தேடி வருகிறார்கள்.

    மனைவியுடன் கள்ளதொடர்பு வைத்திருந்த பைனான்ஸ் அதிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×